பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க அலாரம் ஒலியே வீட்டின் பக்கத்திலிருக்கிற அலங்கார அன்னை தேவாலயத்திலிருந்து வருகிற முதல் பாடல் தான் “நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில்”. இந்த பாடலை கேட்கும் போது கிடைக்கிற மன அமைதி என்பது எப்படி சாத்தியமானது என்பது இன்று வரை என்னிடம் பதில் இல்லை. உள்ளச்சமநிலையற்று இருந்தால் இப்போதும் கேட்கும் பாடல் இது தான்.
ஊரில் வேலையில்லாமல் சுற்றித் திரிந்த அண்ணன் ஒருவரை காதலித்த என் அத்தை மகள் அடிக்கடி முணுமுணுக்கிற பாடல் “நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம்”. இந்த பாடலை பின் நாளில் அவங்க தங்கைக்காக நான் பாடித்திரிஞ்ச காலமும் இருந்தது. இன்றும் மைனாக்குட்டிக்காக அடிக்கடி கேட்கிற, பாடுகிற பாடலும் கூட..
ஆடி மாதம் கூல் ஊற்றுகிற சென்னை மாரியம்மன் கோவில்களில் சவுண்டு ஸ்பீக்கர்களில் ஒலிபரப்பப்படுகிற போது தான் கூர்ந்து கவனித்தேன். என்ன காதல் பாட்டு ஓடுதுன்னு பிறகு தான் இடையே வருகிற வரிகளின் அர்த்தத்தால் அது காதல் பாடலாக உணர்ந்திருக்கிறேன். ஆத்தாவிடம் முறையிடுகிற பெண்ணின் கூக்குரல் அது. “மேற்கு சீமையில கதை ஒன்னு நடக்குதம்மா” பாடலில் இடையே வரும் “காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா, கழுத்தில் மாலை விழ நினைச்சது தப்பா தாயே” என்ற கூக்குரல் ஆத்தாளையே உலுக்கி எடுத்துடும். இன்றும் வைப் மூட்-க்கு மாற்றுகிற பாடல் இது.
காமம் குறித்த விவரம் இளம் வயதிலே தெரிந்தாலும், புரிதல் தெரிய வரவே கல்யாணமாகி வருடங்கள் கடந்த பிறகு தான் உண்மையை உணர்த்துகிறது. அவசர நிலையில் திரவ வெளியேற்றலுக்கும், ஆர்கசத்திற்கான வித்தியாசமும் கூட. அப்படியான ஒரு பாடல் தான் “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்”. சின்ன வயசுல பொதிகை டிவியில பார்க்கக் கூடாதுன்னு பெருசுங்க அமத்திடுங்க; ஆனால் இப்போதெல்லாம் கேட்கும் போது அந்த குரலில் இருக்கிற வாஞ்சை எங்கேயோ இழுத்துச் செல்லும். ஆங்கிரி மோடிலிருந்து கில்மா மோடுக்கு உடனடியாக மாற்றும் பாடல் இது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. அப்போதெல்லாம் ஆடுறதுக்கான பாடலா மட்டுமே தெரிஞ்சது. பெண்ணின் மன உணர்வை அடக்கி பலி வாங்க காத்திருக்கிற ஒரு பெண்ணோட வலி அது. “ஆட்டமா தேரோட்டமா” கேட்டால் கொஞ்சம் ஆடுவதற்கும், தாளம் போடுவதற்கும், முணுமுணுப்பதற்கும் சூப்பரான பாடல் இது.
இந்த பாடல்கள், வேறு வேறு படங்கள், இசையமைப்பாளர்கள், எழுதியவர்கள் என வித்தியாசப்பட்டாலும் ஒரே ஒற்றுமை இந்த குரல்கள் அனைத்தும் “சொர்ணலதா” என்னும் குரலரசியின் குரல்.
காதுகளின் வழியாக மனதிற்குள் புகுந்து மாயம் செய்கிற வித்தை இந்த குரலுக்கு உண்டு. கோவமா இருந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப, வெறுப்பு மனநிலை வந்தால் காதலை அதிகப்படுத்த, சோம்பலை முறித்து துள்ளாட்ட மனநிலைக்கு மாற்ற, இப்படி என்னென்னவோ செய்கிற குரல் இது.
திடீரென்று நேற்று எப்ப இறந்தாங்க சொர்ணலதா என்று இணையத்தில் பார்த்த போது 2010 செப்டம்பர் 12 அன்று இறந்திருக்காங்க என்று தெரிய வந்தது. குரலால் வசியம் செய்த வசியக்காரிக்கு ‘சொர்ணலதா’-வுக்கு நினைவஞ்சலி!